இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் 2024 தொடர்பாக, லிஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு, அதாவது சித்திரை திருநாளை சிங்கப்பூர் வாழ் தமிழர்களுடன் கொண்டாடி வருகிறது லிஷா. நடப்பாண்டிற்கான இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் 2024 தொடர்பான நிகழ்ச்சி நிரல் கொண்ட பட்டியலை லிஷா தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், வரும் ஏப்ரல் 08- ஆம் தேதி மாலை 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் லிஷா நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். ஏப்ரல் 12- ஆம் தேதி மாலை 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘ஊக்கமளிக்கும் பேச்சு’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 13, 20 ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செராங்கூன் சாலையில் உள்ள அரங்கத்தில் ‘Khazana Hunt’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 13- ஆம் தேதி மாலை 06.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை Poli@Clive Street- ல் உள்ள அரங்கத்தில் ‘INY Show’-வும், ஏப்ரல் 14, 21 ஆகிய தேதிகளில் காலை 08.30 மணி முதல் காலை 09.30 மணி வரை Campbell Lane- ல் சூரிய யோகாசனம் நிகழ்ச்சியும், ஏப்ரல் 14- ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று மாலை 06.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை Poli@Clive Street- ல் உள்ள அரங்கத்தில் சித்திரை கலை விழாவும், ஏப்ரல் 20- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை Poli@Clive Street-ல் உள்ள அரங்கத்தில் ‘Tamil Symphony Show’ நிகழ்ச்சியும், ஏப்ரல் 21- ஆம் தேதி மாலை 06.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை Poli@Clive Street-ல் உள்ள அரங்கத்தில் பாட்டு மன்றம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.