அவர் மட்டுமில்லாமல் அவருடன் பங்குபற்றிய முழு அஞ்சலோட்ட அணியே தகுதி நீக்கம் செய்யப்பட்டு, குறித்த அணி வீரர்களும் தமது பதக்கங்களை இழக்க வேண்டிய ஒரு நிலை நேரிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 4X400 அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் சிஜே உஜாவிற்கு (CJ Ujah ) மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட பதார்த்தத்தை எடுத்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக அவர் மட்டுமில்லாமல் அவருடன் பங்குபற்றிய முழு அஞ்சலோட்ட அணியே தகுதி நீக்கம் செய்யப்பட்டு, குறித்த அணி வீரர்களும் தமது பதக்கங்களை இழக்க வேண்டிய ஒரு நிலை நேரிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து ஒலிம்பிக் குழு தலைவர், “இங்கிலாந்தின் ஓட்ட வீரரான சிஜே உஜா ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கியுள்ளதால், அவருடன் பங்குபற்றி டோக்கியோ ஒலிம்பிக்கில் 4X400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சக வீரர்களும் தங்களது பதக்கத்தை பறிகொடுக்க கூடிய நிலை உருவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம்” என தெரிவித்துள்ளார்.
உஜாவிற்கு மேற்கொண்ட சோதனையில் அவர் தடைசெய்யப்பட்ட 2 மருந்துகளை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
27 வயதான உஜா, இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் 4X400 அஞ்சலோட்ட போட்டியில் இங்கிலாந்துக்காக ஓட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத்தொடர்ந்து சார்னால் ஹுக்ஸ், ரிச்சர்ட் கிட்டி மற்றும் நாதனில் மிச்சேல் பிளேக் ஆகியோர் போட்டியில் ஓடி மயிரிலையில் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தனர்.
தற்போது அவரின் மறுபரிசோதனை முடிவும் உஜாவுக்கு எதிராக வந்தால், அவரோடு சேர்த்து சக வீரர்களின் பதக்கங்களும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.