Last Updated:
தற்போது மொத்தம் 9 அணிகள் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் 12 அணிகளைப் பங்கேற்க வைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு நடத்த உள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் அணிகள் பெற்ற வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதும்.
இதுவரை 2019 ஆம் ஆண்டிலிருந்து 3 சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடியது. இதில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் கோப்பையை வென்றன.
சமீபத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணியும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. இதில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று முதன் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தற்போது மொத்தம் 9 அணிகள் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுகின்றன. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கூடுதல் அணிகளை சேர்க்கலாமா என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஐசிசி–ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தா நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இரட்டை முறையில் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள். இந்த முறை நடைமுறை செய்யப்பட்டால் மொத்தம் 12 அணிகள் இந்த தொடருக்காக விளையாடும்.
அந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். இந்த முறையில் டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் அணிகள் பங்கேற்கும் என்பதால் போட்டி சுவாரஸ்யம் நிறைந்ததாகவும், இன்னும் பல நாடுகளுக்கு டெஸ்ட் போட்டி விரிவுபடுத்தப்படும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்.
July 21, 2025 3:43 PM IST


