Last Updated:
இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களுக்கு மேல் குவித்து, ஜிம்பாப்வேயை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில அதிக விக்கெட் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் அணியில் சில முக்கிய மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.
தற்போது இந்தியாவின் நெட் ரன் ரேட் (NRR) -3.800 ஆக சரிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி குறைந்தது 100 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உள்ளது.
இந்தச் சூழலில் ரன் ரேட்டை உயர்த்த அதிரடியான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் வீரர்கள் உள்ளனர். இந்த இமாலய இலக்கை எட்ட இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக, அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
பவர் பிளே ஓவர்களில் 70-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து ரன் ரேட்டை உயர்த்த இது உதவும். அதேபோல், சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் மீண்டும் அணிக்குத் திரும்பும் அக்சர் படேல் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு எதிரணியை மிகக் குறைந்த ரன்களில் சுருட்ட இந்தியா திட்டமிடலாம்.

