Last Updated:
2025 ஆசிய கோப்பையின் போது, காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் சர்ச்சையானது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா சர்மா பங்கேற்காத நிலையில் நாளைய மேட்ச்சில் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டமான இந்தியா – பாகிஸ்தான் மோதல் நாளை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, தற்போது முழு உடல்நலம் பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதை சூர்யகுமார் யாதவ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், “பாகிஸ்தான் கேப்டன் அபிஷேக் விளையாட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே ஆகட்டும். அபிஷேக் நாளை நிச்சயம் விளையாடுவார்” என்று கிண்டலாக தெரிவித்தார்.
முன்னதாக, சல்மான் ஆகா இந்தியாவின் முழு பலம் கொண்ட அணியுடன் மோதவே தாங்கள் விரும்புவதாகக் கூறியிருந்தார்.


