உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகள் நிறைவு பெற்று, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சூப்பர் 8 சுற்றுகள் நிறைவு பெற்று அரை இறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.
டிரினிடாடில் நடைபெற உள்ள முதல் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதி போட்டி நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
இந்த போட்டி கயானா மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதே மன எழுச்சியோடு நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி கோப்பையை மீண்டும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. அந்த அணியில் பிலிப் சால்ட், ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கி அணிக்கு நல்ல ஸ்கோரை எடுத்துக் கொடுத்துள்ளனர். ஜானி பேர்ஸ்டா, ஹாரி ப்ரூக், மொயின் அலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய களங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
இதேபோன்று பவுலிங்கில் அடில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், கிரிஸ் ஜோடன், ரீஸ் டாப்ளே ஆகியோரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவம் மிக்கவர்கள் என்பதால் இந்திய அணிக்கு அவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள்.
இதையும் படிங்க – 6 போட்டிகளில் 66 ரன்கள்… உலகக்கோப்பை டி20 தொடரில் திணறும் விராட் கோலி!
இதேபோன்று இந்திய அணி தரப்பில் பேட்டிங், பௌலிங் என அனைத்து டிபார்ட்மெண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் நாளை நடைபெற உள்ள இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் முதலிடத்தை பிடித்த அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
