Last Updated:
Work From Home முறை, எரிபொருள் செலவை குறைக்கும் மாற்று தீர்வாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட “முடிந்தவரை Work From Home முறையை பின்பற்றுங்கள்” என்ற அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கால நினைவுகளை மீண்டும் தூண்டும் வகையில் வந்த இந்த அறிவிப்பு, சாதாரண நிர்வாக நடவடிக்கையாக மட்டுமல்லாமல், உலகளாவிய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியின் எச்சரிக்கை மணி என்றும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈரான் – அமெரிக்கா மோதல், கச்சா எண்ணெய் இறக்குமதி சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரத்தில் புதிய அழுத்தங்கள் உருவாகி வரும் நிலையில், Work From Home முறை மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியர் முத்துராஜ் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
இந்தியா தனது எரிபொருள் தேவைகளின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக மேற்காசிய நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதன் தாக்கமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. ஏற்கனவே சில பகுதிகளில் இரவு நேரங்களில் பெட்ரோல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்கிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் தேவையற்ற பயணங்களை குறைத்து, எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மத்திய அரசு Work From Home முறையை ஊக்குவித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அனைத்து துறைகளிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதும் உண்மை. போலீஸ், மருத்துவம், தபால், போக்குவரத்து, தொழிற்துறை மற்றும் பல அரசு சேவைகள் நேரடி பணியை சார்ந்துள்ளதால், அவற்றில் வீட்டிலிருந்து பணிபுரியும் முறை கடினமாகவே இருக்கும்.
அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற துறைகளில் Work From Home முறை, எரிபொருள் செலவை குறைக்கும் மாற்று தீர்வாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாக பார்க்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி டாலர் அடிப்படையில் நடைபெறுவதால், டாலரின் மதிப்பு உயரும்போது இந்தியா கூடுதல் செலவினத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளிலும் நேரடியாக எதிரொலிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், ஒரு நாட்டை மட்டுமே நம்பாமல் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதேசமயம் சூரிய சக்தி, மின்சார வாகனங்கள் மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், “எரிபொருள் நெருக்கடி என்பது வெறும் பொருளாதார சிக்கல் மட்டுமல்ல. அது நாட்டின் வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையே நேரடியாக பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவருகிறது. எனவே அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து எரிபொருள் சேமிப்பு மற்றும் மாற்று எரிசக்தி பயன்பாட்டில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
May 16, 2026 10:13 AM IST

