மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 7-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான தேர்தல் தேதிகளை கடந்த 15 ஆம் தேதி அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 7,04,59,284 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 3.60 கோடி ஆண்கள், 3.44 கோடி பெண்கள் மற்றும் 1,382 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.
மேற்கு வங்க அரசியலில் பெண்களின் வாக்குகள் எப்போதும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், அனைத்து கட்சிகளும் பெண் வாக்காளர்களைக் கவரும் திட்டங்களை முன்வைக்கின்றன.
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், 291 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 இடங்களை அதன் கூட்டணியான பாரதிய கோர்கா பிரஜா மோர்ச்சா (BGPM) கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. 2021 தேர்தலில் 215 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த மம்தா, இந்த முறையும் ஹாட்ரிக் வெற்றியைத் தக்கவைக்கத் தீவிரமாக உள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பாஜக, ஏற்கனவே 255 வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக அறிவித்துத் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. முகமது சலீம் தலைமையிலான சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த முறை சிபிஐ(எம்எல்) மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆகியவற்றுடன் இணைந்து களம் காண்கின்றன.
காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இது தவிர பிஎஸ்பி, எஸ்யூசிஐ போன்ற கட்சிகளும் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் மம்தா பானர்ஜி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், இந்த முறை பாஜக மற்றும் இடதுசாரிக் கூட்டணியின் சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை மற்றும் புதிய அரசியல் சூழல்கள் இந்தத் தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 48.5 சதவீதம்பேர் மம்தா பானர்ஜி வரவேண்டும் என்றும், 33.4 சதவீதம் பேர் சுவேந்து அதிகாரி முதல்வராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 194 இடங்களிலும் பாஜக கூட்டணி 98 முதல் 108 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
32.7 சதவீதம் பேர் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதென்றும், 10.6 சதவீதம் பேர் நன்றாக உள்ளதென்றும், 10.2 பேர் சுமாராக உள்ளதென்றும் தெரிவித்துள்ளனர்.
18.3 சதவீதம் பேர் மோசம் என்றும், 20.6 சதவீதம் பேர் மிக மோசம் என்றும், 7.6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் எந்த பிரச்னை இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்ற கேள்விக்கு வேலையில்லா பிரச்னை என்று 37.2 சதவீதம் பேரும், சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு பிரச்னை என்று 15.9 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வு என்று 10.5 சதவீதம் பேரும், ஊழல் என்று 10.3 சதவீதம் பேரும், வளர்ச்சியின்மை என்று 6.6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எந்த விஷயம் சவாலானதாக இருக்கும் என்ற கேள்விக்கு உட்கட்சி மோதல் என்று 19.9 சதவீதம்பேரும், சரியான தலைவர் இல்லாதது என்று 17.2 சதவீதம் பேரும், கருத்தை கொண்டு சேர்ப்பதில் தொய்வு என்று 12.3 சதவீதம்பேரும், கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதாக 12.5 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

