சீனாவைச் சேர்ந்த UBTECH ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் தானாகவே இயங்கக்கூடிய, தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் முதல் தன்னாட்சி ரோபோவாகக் கருதப்படும் இந்த “வாக்கர் S2” ரோபோவை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த ரோபோ 5 அடி 3 அங்குல உயரமும், சுமார் 43 கிலோ கிராம் எடையும் கொண்டது என நிறுவனம் தனது யூடியூப் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் இது வை-ஃபை மற்றும் புளூடூத் இணைப்புகளுடனும் செயல்படுகிறது.
வாக்கர் S2 ரோபோ இரட்டை பேட்டரி அமைப்புடன் 48-வோல்ட் லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்துகிறது. இது இரண்டு மணி நேரம் நடக்கவோ அல்லது நான்கு மணி நேரம் நிற்கவோ சக்தியைத் தருகிறது.
பின்னர் மறுபடியும் சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 90 நிமிடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜ் ஆனவுடன், அந்த பேட்டரியை எடுத்து மாட்டிக்கொள்ளும்.
ரோபோட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இந்த ரோபோ தொழிற்சாலையில் பணியாற்றுவது காட்டப்பட்டுள்ளது.