Last Updated:
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 5 சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 2) குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் நேற்று மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான காகிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் கடுமையான பந்துவீச்சை எதிர்கொண்டார்.
அவர்கள் வைபவ்வின் உடலையும், தலையையும் குறிவைத்து வீசப்படும் ஆபத்தான “பாடி-லைன்” (Body-line bouncers) பவுன்சர் பந்துகளைத் தொடர்ந்து வீசினர். இந்த உத்திக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “15 வயது சிறுவனுக்கு எதிராக இதுபோன்ற பாடி-லைன் பந்துவீச்சை பயன்படுத்துவதை ஒரு தந்தையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தனது கவலையை வெளிப்படுத்தி, குஜராத் அணியை விமர்சித்துள்ளார் இர்பான் பதான்.
தற்போது இர்பானின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் சுமாராக விளையாடிய நிலையில், சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.26 ஆகும். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
215 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் (58 ரன்கள்) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 பந்துகளில் 167 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். சாய் சுதர்சன் எதிர்பாராதவிதமாக ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 5 சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை குஜராத் எதிர்கொள்ளவுள்ளது. தோல்வியால் மனமுடைந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மைதானத்திலேயே அழுதுள்ளார், இந்தத் தோல்வி ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


