அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ். ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சில்லுகுரியின் பெற்றோர், 70-களில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்ததாகக் தெரிகிறது. அங்கேயே பிறந்து வளர்ந்து, இந்து மதத்தைப் பின்பற்றிய உஷா சிலுகுரி, 2013-ம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது, கத்தோலிக்க கிறிஸ்தவரான ஜேடி வான்ஸை சந்தித்திருக்கிறார்.
அப்போதுமுதல் காதலித்து வந்த இருவரும், 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார் உஷா வான்ஸ். இந்த நிலையில், அமெரிக்கத் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜேடி வான்ஸ், நேற்றுப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வில், உஷா சிலுகுரி வான்ஸ் தன் கணவரை பெருமையுடன் பார்த்து, பூரித்து மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

