நியு யார்க்கில் ட்ரோன்களை பறக்க விடும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் நியூ ஜெர்ஸியில் பொழுதுபோக்குக்காகவும், வணிக காரியங்களுக்காகவும் வானில் ட்ரோன்களை பறக்க விடுவது சட்டப்பூர்வமானது. ஆனால் அது உள்ளூர் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாக விதிமுறைகள் மற்றும் விமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ட்ரோன் ஆப்பரேட்டர்கள் FAA சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
விர்ஜினா மாகாணம் மற்றும் சில இடங்களிலும் ட்ரோன்கள் பறப்பதை மக்கள் பார்த்துள்ளனர். அவை வழக்கமான ட்ரோன்களில் இருந்து மாறுபட்டவையாகவும், ராணுவத் தளவாடத்தை நோக்கிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் 10,15 ட்ரோன்கள் வானில் பறந்ததை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பார்த்ததாக காவல்துறையில் கூறியுள்ளார் ஒரு குடியிருப்பு வாசி. அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களிலும் ட்ரோன்கள் பறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்க தீவிர நடவடிக்கை எடுக்குமா அமெரிக்க அரசு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு சீன உளவு பலூன் பறந்தது, ஏலியன்கள் குறித்த அச்சம், உலகம் முழுவதும் போர் எழுவதற்கான சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். வல்லரசு நாட்டில் யார் இயக்குகிறார் என்றே தெரியாத ட்ரோன்கள் நடமாட்டம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என அரசு சொல்வது, அரசு மக்களிடம் எதையாவது மறைக்கிறதா என்ற சந்தேகத்தையே எழுப்பியிருக்கிறது.

