Last Updated:
மனிதர்களுக்கான மருத்துவம் மட்டுமன்றி கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மகளிர் விடுதி உயர் தரத்தில் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து கல்வி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் மாணவிகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்துவதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, மனிதர்களுக்கான மருத்துவம் மட்டுமன்றி கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நவீன மருத்துவமனைகள் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களை அமைப்பதற்காக கடன் சார்ந்த மூலதன மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்கள் மற்றும் தொழில்முனைவோர் பெரும் பயன் பெறுவார்கள்.
மேலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுஷ் (AYUSH) துறையை நவீனமயமாக்க, நாடு முழுவதும் உள்ள ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வகங்களைத் தரம் உயர்த்த நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். இதேபோன்று பல முக்கிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.


