அதைத் தொடர்ந்து ஃபாக்ஸ் நியூஸ் சேனாலுக்கு பேட்டியளித்திருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இனியும் அமெரிக்காவுடனான உறவை சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்… ஏன் முடியாது? ட்ரம்புடனான உறவைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க-உக்ரைன் உறவு இரண்டுக்கும் மேற்பட்ட அதிபர்களைப் பற்றியது. ரஷ்யாவின் மிகப் பெரிய, ஆயுதமேந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில், உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி மிகவும் தேவை. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் அதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.
நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. நாங்கள் ஏதும் மோசமான காரியத்தைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு வருத்தம் மட்டும்தான். செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தக் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கக் கூடாது” என்றார்.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “தேவைப்படும் வரை ஆஸ்திரேலியா உக்ரைனுடன் நிற்கும். உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த தேசிய இறையாண்மைக்காக மட்டுமல்ல, சர்வதேச சட்ட ஆட்சிக்காகவும் போராடுகிறார்கள். நாங்கள் உக்ரைனுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நிற்போம், ஏனெனில் இது ஒரு ஜனநாயக தேசத்திற்கும் புடின் தலைமையிலான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் இடையிலான போராட்டம்.” என்றார்.

