ஷாங்காய், பெய்ஜிங் இரண்டு இடங்களிலும் அக்ரோபாடிக் (Acrobatic shows) கூத்துகள் பார்த்தோம். இதில் சீன மக்களை மிஞ்சுவதற்கு உலகில் வேறு ஒருவரும் இல்லை.
இளம் ஆண்களும் பெண்களும் உடலை வளைத்து பல்வேறு வித்தைகளைச் செய்து காண்பிக்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால் தான் ஒலிம்பிக் ஜிம்னாசியம் (Gymnasium) போட்டிகளில் சீனர்கள் அதிக பதக்கம் வெல்லுகிறார்கள்.
நாங்கள் சந்தித்த மேலைநாட்டினர் ஒரு சிலர் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தனர். இந்திய நாடு என்றால் ஒரு சிலருக்கு தெரியவில்லை!
நகரெங்கும் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் இடையே எங்கு பார்த்தாலும் மரங்கள் வளர்ந்து இருக்கின்றன. செடிகள் இல்லாத இடமே இல்லை. செடிகள் அனைத்தும் அழகாக வெட்டப்பட்டு பார்ப்பதற்கே செம்மையாக, நேர்த்தியாக இருக்கிறது. கண்களைக் கவர்கிறது. சீனாவில் காற்று மாசு குறைவாக இருக்கிறது.ஏரி குளங்கள் எல்லாம் தூய்மையாக இருக்கிறது.
சீனப் பெருஞ்சுவர் (Great wall of China) குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் 6400 கிலோமீட்டர் தூரம் வளைந்த நெளிந்து செல்கிறது. மிக உயரமான படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால்தான் அதனை நன்றாக பார்க்க முடிகிறது.
இது மங்கோலியாவில் இருந்தும் மஞ்சூரியாவில் இருந்தும் வந்த சியோம்புகளின் படையெடுப்புகளில் இருந்து சீனப் பேரரசை காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். எவ்வளவு அகலமாக, உயரமாக, நீளமாக கட்டியுள்ளாரகள்!.
நாட்டைப் பாதுகாக்க அப்பப்பா! எவ்வளவு முயற்சி எடுத்துள்ளார்கள்! சீனப்பெருஞ்சுவரின் மீது நின்று புகைப்படம் எடுத்த போது பிறவி பயனை அடைந்து விட்டது போல் இருந்தது எங்களுக்கு!

