Last Updated:
Agriculture budget 2025 – 2026 | மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு தனித்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டில் 1000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும் ரூ. 24 கோடி செலவில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் (Solar Water Pump) அமைத்துக் கொடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மொத்தமாக ரூ. 45,600 கோடி நிதி ஒதுக்கீடு வேளாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.
குறிப்பாக, எரிசக்தி மற்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கவும், நீடித்த நிலையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விவசாயத்தில் மரபுசார் ஆற்றல் உபயோகத்தை குறைத்திடவும் நீடித்த நிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு வேளாண்மையில் நீர்ப்பாசனம் செய்யும் நோக்கில் மின்சார இணைப்பு இல்லாத உழவர்களுக்கு தனித்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்து தரப்படும் என்றும், 2025-2026ஆம் ஆண்டில் 1000 உழவர்கள் பயனடையும் வகையில், சூரியசக்தி பம்பு செட்டுகள் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் உழவர்களுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர உழவர்களுக்கு 60 சதவீத மானியத்திலும் ரூபா 24 கோடி செலவில் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் புதிய திறன்மிகு மின்மோட்டார் பம்பு செட்டுகளை மானியத்தில் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றவும் அரசு உதவும். 1000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் மின்மோட்டார் பம்பு செட்டின் விலையில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.15,000 வரை வழங்கப்படும். இதற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதி உதவிகள் உயர்வு : வேளாண்மைத்துறை அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளிடையே நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 23,74,741 இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் இலவச மின்சார மானியமாக இதுவரை ரூ.6,962.93 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணமாக சுமார் ரூ.8,186 கோடியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
March 15, 2025 12:43 PM IST
TN Agriculture Budget 2025: விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலார் பம்பு செட்டுகள் : வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு


