கோலாலம்பூர்:
குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, 56 வயது செம்பனை எண்ணெய் (Oil Palm) வணிகம் செய்யும் பெண் தொழிலதிபர் ஒருவர் போலி முதலீட்டுக் கும்பலிடம் RM245,403 தொகையை இழந்துள்ளார்.
கடந்த மே 6-ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் கண்ட விளம்பரம் மூலம் அப்பெண் இந்த மோசடிக் கும்பலின் தொடர்பைப் பெற்றுள்ளார் என்று, தங்காக் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரண்டண்ட் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.
டிக்-டாக் செயலியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனச் சந்தேக நபர்கள் அப்பெண்ணை நம்ப வைத்துள்ளனர், இதனை உண்மையென நம்பிய அப்பெண், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 22 வரை சந்தேக நபர்கள் வழங்கிய 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 தனித்தனிப் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM245,403 தொகையை அனுப்பியுள்ளார்.
வாக்குறுதி அளிக்கப்பட்டபடி லாபத் தொகை கிடைக்காததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் தங்காக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் புகார் அளித்தார் என்றும், தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் (ஏமாற்றுதல்) கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



