TCS-ஐ பின் தொடரும் Wipro: குமுறும் ஐடி ஊழியர்கள்.. லேப்டாப்பில் மறைந்திருக்கும் பிக்பாஸ்..!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது பணியாளர்களின் டிஜிட்டல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்கவும், வேலை நேரத்தை அளவிடவும் ஒரு புதிய Employee Productivity Tracker என்ற முறையை கொண்டு வந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களின் லேப்டாப் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் லேப்டாப்களில் மென்பொருளை பயன்படுத்தியதை தொடர்ந்து, தற்போது விப்ரோவும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
விப்ரோ நிறுவனம் தனது ஊழியளர்களின் லேப்டாப்களில் TimeScope என்ற கண்காணிப்பு அமைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இதன் மூலம் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தை நிறுவனத்தால் துல்லியமாக அளவிட முடியுமாம். இந்த நடவடிக்கையின் மூலம் ஊழியர்களின் டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் வேலை நேரம் ஆகியவை கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஊழியர்கள் எவ்வளவு நேரம் லாகினில் இருக்கிறார்கள், எந்தெந்த செயலிகளை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டு டேஷ்போர்ட்டில் காட்டும், இதனை ஊழியர்களும் அவர்களின் மேலாளர்களும் பார்க்க முடியும். ஆனால் ஸ்கிரீனில் என்ன பார்க்கிறார்கள் , மவுஸை எத்தனை முறை கிளிக் செய்கிறார்கள் என்பதெல்லாம் இதில் காட்டாது என சொல்லப்படுகிறது.
குறிப்பாக பணியாளர்கள் லேப்டாப்பில் இயங்காமல் அல்லது எவ்வித பணியும் செய்யாமல் இருக்கும் நாட்கள் தீவிரமாக கவனிக்கப்படும். ஒருவேளை பணியாளர் நீண்ட நாட்களுக்கு செயல்படாமல் Inactive-ஆக இருந்தால், அது தானாகவே விடுமுறை நாளாக கருதப்படும். கொரோனா தொற்று காலத்தை தொடர்ந்து ஹைபிரிட் மற்றும் ரிமோட் முறைகளில் பல ஐடி ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
இதனை அடுத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உற்பத்தி திறனை தொடர்ந்து கண்காணிக்க பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் லேப்டாப் பயன்பாடுகளை கண்காணிக்க Digital User Experience Monitoring போன்ற கருவிகளை பயன்படுத்தியது விவாத பொருளானது.
தற்போது விப்ரோவும் இதுபோன்ற முறைகளை தீவிரப்படுத்தி இருப்பது, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களின் உற்பத்தித் திறனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை காட்டுவதோடு, ஊழியர்களின் பிரைவசி குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே ஐடி ஊழியர்கள் ஏஐ வருகை, சம்பள உயர்வு குறைந்தது உள்ளிட்ட பிரச்சினைகளில் தவிக்கின்றனர். ஓரளவு ஊழியர்கள் பணிநீக்கம் குறைந்திருந்தாலும் ஐடி வேலைகளில் பணி பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில் நிறுவனங்கள் இப்படி கண்காணிப்பு வேலைகளை செய்வது பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
நிறுவனங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்யவும் ஏஐ பயன்பாடுகளை கண்காணிக்கவும் இப்படி கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

