மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர், வர்த்தகர், கட்சி உறுப்பினர் படுகொலை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் உள்ளிட்ட ஐந்து மனிதக் கொலைகள் தொடர்பிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஐடியினரால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (15) திங்கட்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2025 ஏப்ரல் 7 அன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டதாகப் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கனகராசா சரவணன்


