
டி.கே.பி.கபில
சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, திங்கட்கிழமை (29) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனத் தொழிலதிபரான பெண் ஆவார்.
திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை 12:30 மணியளவில், சீனாவின் குன்மிங் (Kunming) நகரிலிருந்து, ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள், சீனத் தயாரிப்பான 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் காட்ன்கள் (cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டறியப்பட்டது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எவ்விதப் பொருட்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லாத ‘பச்சை வழி’ (Green Channel) ஊடாகச் செல்ல முற்பட்ட போதே, அவர் சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தற்போது குறித்த பெண் சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

