
அடுத்த 2030 கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் அணிகளின் எண்ணிக்கையை மேலும் 16 உயர்த்தி, ஒட்டுமொத்தமாக 64 அணிகளாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
சுவிஸ் ஊடகமான ‘புளூவின்’ தளத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
உலகக் கிண்ண விரிவாக்கம் ஏன்? இன்ஃபான்டினோவின் விளக்கம்
“உலகக் கிண்ணம் என்பது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உலகிற்குமானது. ஒவ்வொரு நாடும் உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்க வேண்டும். தற்போது உலகளவில் அனைத்து நாடுகளின் கால்பந்து தரமும் உயர்ந்து கொண்டே வருகிறது. சிறிய நாடுகளுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை நாம் தராவிட்டால், அவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.” — இன்ஃபான்டினோ
2030 உலகக் கிண்ணத் தொடரானது தற்போதைய திட்டப்படி, முதல் மூன்று போட்டிகள் மட்டும் தென் அமெரிக்க நாடுகளான உருகுவே, ஆர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் (தலா ஒரு போட்டி வீதம்) நடத்தப்பட்டு, மீதமுள்ள அனைத்து போட்டிகளும் மொராக்கோ, போர்த்துகல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

