எம்.எச்.எம். சியாஜ்
காலி – ஹபராதுவ கடற்கரைக்கு சுற்றுலாச் சென்று நீராடிய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி: கட்டுநாயக்க பகுதியிலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினரே ஹபராதுவ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தனர். இதன்போது, குறித்த இரு இளைஞர்களும் திடீரென நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு களுக்கல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


