பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டியுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் நடந்த இராணுவ மோதல் கடந்த 10 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்தனர் எனவும் பாகிஸ்தான் தரப்பில் 40 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றுள்ளார். விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், வீரர்களின் துணிச்சலை பாராட்டினார். வீரர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். (a)


