“மொழிகளுக்கிடையிலான பன்முகத்தன்மையை நாம் ஒரு சவாலாகப் பார்க்காமல், மதிக்கப்பட வேண்டிய பலமாகப் போற்ற வேண்டும்” எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, ‘மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் இன்று (13) நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மொழிசார் பாரம்பரியமும் கூட்டு அர்ப்பணிப்பும்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்:
- உலகளாவிய இயக்கம்: பங்களாதேஷ் மக்களின் தொலைநோக்கு முயற்சியால் உருவான இந்தத் தினம், இன்று மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது.
- சமூக நல்லிணக்கம்: மொழி உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே சமூக நல்லிணக்கத்தை வளர்க்க முடியும். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுப்பது மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் செயலாகும்.
- அழியும் மொழிகள்: டிஜிட்டல் யுகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. தொழில்நுட்பம் மற்றும் சரியான கொள்கை ரீதியான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது.
மாணவர்களுக்கு விருதுகள்
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்குப் பிரதமர் இதன்போது சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு
இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ் (Andalib Elias), பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இராஜதந்திரிகள், சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான கலாசாரப் புரிதல் மற்றும் நட்பு இந்த அர்ப்பணிப்புகளின் மூலம் மேலும் வலுவடைந்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.








