டி.கே.ஜி. கபில
உலகின் முன்னணி அழகன் போட்டிகளில் ஒன்றான “மேன் ஒஃப் த வேர்ல்ட் 2026” (Man of the World) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சஞ்சுல கேஷான், இரு முக்கிய சர்வதேச விருதுகளை வென்று சனிக்கிழமை (13) அன்று நாடு திரும்பினார்.
மே 28 முதல் ஜூன் 06 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற இப்போட்டியில், 28 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் திறமையாகச் செயல்பட்ட 26 வயதுடைய தனமல்விலவைச் சேர்ந்த சஞ்சுல கேஷான், ‘சிறந்த முறையான ஆடை’ (Best in Formal Wear) பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், ‘சிறந்த ஆளுமை’ (Best Personality) பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். மேலும், சிறந்த கடற்கரை உடை, சிறந்த உடல்வாகு, சிறந்த ஒளிப்படம், சிறந்த தேசிய உடை மற்றும் உலக ஃபேஷன் ஆகிய ஐந்து பிரிவுகளிலும் முதல் 10 இடங்களுக்குள் அவர் தெரிவானார்.
போட்டியின் போது அவர் காட்சிப்படுத்திய “கறுப்பு குமாரன்” (Kalu Kumara) கதாபாத்திரம் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, அவரது இயற்கையான நிறம் ஆப்பிரிக்கப் போட்டியாளர்களை விட தனித்துவமாக அமைந்ததாக நடுவர்கள் பாராட்டினர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SQ-462) விமானம் மூலம் தனது பயிற்சியாளரும் தேசிய இயக்குநருமான சமீர வீரசிங்கவுடன் சனிக்கிழமை (13) முற்பகல் 10.57 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சஞ்சுலவை, அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையர் ஒருவர் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.











