இலங்கையில் ‘முப்பரிமாண ஒழிப்பு’ (Triple Elimination) எனும் விசேட சுகாதார திட்டம் திங்கட்கிழமை (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தத்தில் ‘ஹெபடைடிஸ் – பி’ (Hepatitis B) வைரஸ் தொற்று காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்கான இரத்தப் பரிசோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மகப்பேறு மருத்துவச் சாயனங்களிலும் (Maternity Clinics) இந்த இரத்தப் பரிசோதனை கட்டாயமாக முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தாயிடமிருந்து குழந்தைக்கு மனித நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு வைரஸ் (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) ஆகிய நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான இரத்தப் பரிசோதனைத் திட்டம் இலங்கையில் நீண்டகாலமாகவே நடைமுறையில் இருந்து வந்தது.
இந்த ‘இருபரிமாண ஒழிப்பு’ (Dual Elimination) திட்டம் இலங்கையில் பெரும் வெற்றியடைந்துள்ளதுடன், தாயிடமிருந்து குழந்தைக்கு ‘எச்.ஐ.வி’ (HIV) மற்றும் ‘சிபிலிஸ்’ நோய்கள் பரவுவதை முற்றாகத் தடுத்த நாடாக, கடந்த 2019ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதனுடன் ஹெபடைடிஸ் – பி நோயும் சேர்க்கப்பட்டு, இத்திட்டம் முப்பரிமாண ஒழிப்புத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


