
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பியசேன கமகே, இன்று (20) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தலா 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி, காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரைத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாகப் பணியமர்த்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

