பாறுக் ஷிஹான்
தனது கோழிக் கடையைச் சுத்தம் செய்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் செவ்வாய்க்கிழமை (21) அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவரை, அயலவர்கள் உடனடியாக மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அன்று மதியம் உயிரிழந்தார்.
இவ்விபத்தில் சம்மாந்துறை, மலையடிக்கிராமம், 13ஆம் வீதியைச் சேர்ந்த கலந்தர் லெப்பை ரமீஸ் (வயது 42) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுனின் கட்டளைக்கமைய, பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல்-ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மாலை வேளையில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


