லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் திங்கட்கிழமை (13) அன்று நடத்தப்பட்ட பரீட்சையை எழுதிவிட்டு, மதியம் 12:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் அருகிலுள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும், ஒரு மாணவர் மட்டும் கரை திரும்பவில்லை. இவ்வாறு காணாமல் போன மாணவர், மிளகுசேனை (பியபீல்ட்) தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல் போன மாணவரைத் தேடும் நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்தனர். அவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (14) பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதில், பொலிஸாரின் சூழியோடிகளும் பங்கேற்றிருந்தனர்.
எஸ்.கௌசல்யா

