
க. அகரன்
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார், செவ்வாய்க்கிழமை (04) மீட்டுள்ளனர். அந்த பெண்ணின் கணவன், குழந்தையுடன் மாயமாகி இருந்த நிலையில், மட்டக்களப்பு, ஏறாவூரில் வைத்து புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் காலையில் வீட்டில் இருந்துள்ளனர். பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவத்தில் அதேபகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயாராவார்.
கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

