அரசாங்கத்தின் ஊழல்களால் மக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டாக்டர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் சர்வஜன பலய அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கோபி லோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களுக்குள் ஏழாவது தடவையாகவும் எரிபொருள் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் முற்றாக அடிபணிந்துள்ளமையையே காட்டுகிறது எனச் சாடினார்.
கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது சும்மா வழங்கப்படவில்லை எனவும் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கத்தை இணங்கச் செய்தே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளதால், நாட்டின் வாழ்க்கைச் செலவு மக்கள் மேலும் தாங்க முடியாத அளவிற்கு உயரும் என அவர் எச்சரித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போது, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதன் லாபத்தை மக்களுக்கு வழங்கி, எரிபொருள் விலையை 22 ரூபாவினால் குறைத்துள்ள போதிலும், நமது நாட்டில் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளின் போது தங்களது நாட்டு மக்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கூட்டுத் தீர்வுகளைக் காண்கின்றனர் எனத் தெரிவித்த அவர், ஜப்பான் பிரதமர், சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதற்காக எடுத்து வரும் நடைமுறைச் சாத்தியமான உத்திகளை உதாரணங்களாகக் காட்டினார்.
அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்கள் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு இலவச பஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மாத்திரம் மக்களை ஏமாற்றி, உண்மைகளை மறைக்கும் கொள்கையையே பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மகா திறைசேரியிலிருந்து 10 தடவைகளுக்கும் மேலாக கள்ளக் கணக்கு ஒன்றிற்கு மக்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய கிழக்கு யுத்தம் மாத்திரம் காரணமல்ல, அரசாங்கத்தின் பாரிய ஊழல்களும் மோசடிகளுமே காரணம் எனத் தெரிவித்தார். (a)


