பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான கருத்து வேறுபாடுகள், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளதாகத் தைலாபுரத் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர் ராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மையார் தம்பதியரின் திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி ராமதாஸ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்திற்குத் திடீரென வருகை தந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமணி தனது குடும்பத்துடன் வருகை தந்ததையடுத்து, அவருக்கு அங்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தனது தந்தையிடம் ஆசி பெற்ற அன்புமணி, திருமண நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பில், இரு தரப்பினரும் பரஸ்பரம் நலம் விசாரித்து, கடந்த கால மனக்கசப்புகளை மறந்து மனம் விட்டுப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமகவில் ஏற்பட்ட அதிகார மோதலால், ராமதாஸ் தனி இயக்கம் தொடங்கி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பாமகவின் தலைமை அன்புமணி வசம் இருந்தது. அந்தத் தேர்தலில் ராமதாஸின் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறாத நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக, சௌமியா அன்புமணி வெற்றி பெற்று சட்டப்பேரவை சென்றது பாமகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், “பாமகவை அன்புமணி வசம் ஒப்படைத்துவிடுவேன்” என ஏற்கனவே ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய இந்த இணக்கமான சூழல் பாமகவின் ஒன்றிணைப்பை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில், பாமக தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளதால், அக்கட்சியைத் தங்கள் கூட்டணியில் தக்கவைக்க அதிமுகவும், மீண்டும் சேர்க்க திமுகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தச் சூழலில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் இந்தச் சந்திப்பு, பாமகவின் எதிர்கால அரசியல் பயணத்திலும், கூட்டணி முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

