தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் ராஷி கன்னா, தற்போது புதிய ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.
அங்கு அவர் தங்கி இருந்த கேரவனில் (Caravan), அவருடைய கைப்பையிலிருந்து 50 ஆயிரம் ரூபாயை திருட ஒருவர் முயன்றுள்ளார். அவரை படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பாதுகாப்பு குழுவினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். விசாரணையில் அவர் கேரவன் ஊழியர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் படப்பிடிப்புத் தளங்களில் நடிகைகளுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷி கன்னா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. திருட முயன்ற அந்த பணம் நடிகையுடையது அல்ல என்றும், அவருடைய மேலாளருடைய (Manager) பணம் என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


