நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரத்துக்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில்(டிக்கோயா) செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது ஜீவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கம்லத் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேலும் கருத்துரைத்த ஜீவன் தொண்டமான்.
சிறுநீரக நோய் தாக்கத்திற்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறைகள் நிலவுவதால் அது விரைவில் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பாடசாலைகளில் மலசலகூட வசதிகள் இல்லை. இதை நாங்கள் உலக வங்கியின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்திருந்தோம். மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இந்த போதைப்பொருள் பிரச்சனை 2021 இல் மலையகத்தில் ஒரு பாரிய போதை பொருள் பிரச்சினையாக நடந்து கொண்டிருக்கும் போது நாங்கள் பொலிஸார் இன் ஊடாக ஒரு நடவடிக்கை எடுத்திருந்தோம்.
அதாவது ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்காணிப்பு குழு ஒன்று வைப்போம். அதில் கட்டாயமாக ஒரு பெண், ஒரு ஆண் பொலிஸ் அதிகாரியும் இருப்பர். அந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
இரண்டாவது விடயம் பொலிஸார் நினைத்தால் விழிப்புணர்வு நிகழ்வுகள் செய்ய முடியும். மாதத்திற்கு இரண்டு பாடசாலைகளை சரி முறையே செய்தால் கூட ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அதேபோல் உண்மையான விடயம் என்னவென்றால் 50 வீடுகளுக்கு இரண்டு பொலிஸாரை வைப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. காரணம் மக்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள், போதை பொருள் பிரச்சனையை தடுப்பதற்கு பல்வேறு மாற்று வழிகள் உள்ளன என சுட்டிக்காட்டினார்.

