
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் திங்கட்கிழமை (13) மாலை மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை துறைமுக ஆற்றுப் பகுதியைச் சேர்ந்த ஹச்சி முகம்மது அஸ்ரப் அலி (பயாஸ்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். ஒரு பிள்ளையின் தந்தையான இவர், படகு உரிமையாளர் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) துறைமுகப் பகுதிக்குச் சென்ற இவர், திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், துறைமுகத்தில் தரித்து நின்ற இவரது இயந்திரப் படகில் இவரது பாதணிகள் மட்டும் இருப்பதை அவதானித்த உறவினர்களும் பிரதேசவாசிகளும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் விளைவாக, திங்கட்கிழமை மாலை வாழைச்சேனை துறைமுக ஆற்றுப் பகுதியில் இருந்து அஸ்ரப் அலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

