திருகோணமலை நிலாவெளி கட லில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் அவர் காயமடைந்துள்ளார்.
நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகளான இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் நிலாவெளி புறாத் தீவு அருகிலுள்ள கடற்பகுதியில் முழ்கி நீந்தும் சாதனங்களை அணிந்து, மீன்கள் மற்றும் பவளப்பாறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேறு சில சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற டிங்கிப் படகு ஒன்று மோதியதில், கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த சிறுமி காயமடைந்துள்ளார்.
அச்சம்பவத்தின் போது இடத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த சிறுமியை நிலாவெளி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அச்சிறுமி திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 11 வயதுடைய இத்தாலி நாட்டுச் சிறுமி ஆவர். டிங்கிப் படகின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

