சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயலின் காரணமாக பதுலையிலிருந்து அம்பேவலை வரையிலான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், அம்பேவலை முதல் நானுஓயா வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் தூர ரயில் பாதையில் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாக சீரமைக்கப்படாத காரணத்தால் அந்தப் பகுதியிலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டிருந்தது.
எனினும், அரசாங்கம், ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் இணைந்து குறித்த பாதையில் ஏற்பட்ட சேதங்களை விரைவாகச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
அதன் பின்னர் இன்று காலை 9.00 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி முதலாவது ரயில் உத்தியோகபூர்வமாக தனது பயணத்தை ஆரம்பித்தது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர, நுவரெலியா மாநகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மலைநாட்டு ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளமை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பாதையை விரைவாகப் புனரமைத்து சேவையை மீள ஆரம்பிக்க அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். R





