
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு வைத்தியர்களின் சேவையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உடனடியாக இடைநிறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரசவத்தின்போது ஏற்பட்ட மருத்துவக் குறைபாடுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாகவே சிசு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையின்படி, பிரசவத்தின்போது சிக்கலான நிலை ஏற்பட்டதால், அங்கிருந்த ஒரு வைத்தியர், சம்பந்தப்பட்ட இரு சிரேஷ்ட வைத்தியர்களுக்கும் அவர்களது உடனடி வருகையை வேண்டி ஆறுமுறை அவசரத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த இரு வைத்தியர்களும் அந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரவோ இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின்போது, குறித்த அவசர நிலை ஏற்பட்ட நேரத்தில், அந்த இரு வைத்தியர்களும் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிசேரியன் (Cesarean section) சத்திரசிகிச்சையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அரச கடமை நேரத்தில், தங்களது உத்தியோகபூர்வ பொறுப்புகளைக் கைவிட்டு, மருத்துவ விதிமுறைகளை மீறி தனியார் சேவையில் ஈடுபட்டது பாரதூரமான குற்றமாகக் கருதப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சுகாதார அமைச்சினால் அந்த இரு வைத்தியர்களும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

