
ஹோமாகம, கடுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்தவர்களின் அடையாளம் காண முடியாத உடல்களுக்கு, டியென்ஏ (DNA) பரிசோதனைகளை மேற்கொண்டு அடையாளம் காண்பதற்கு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அவர்கள் புதன்கிழமை (22) அன்று அனுமதி வழங்கினார்.
இவ்விபத்தில் தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த கொதாகொட சிதுகே சஹன் உதார (24), ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த வரதராஜ் தமயந்தி (25), கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த மரியோ எட்வர்ட் (52), தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த வதுகல கமகே திலீப் மதுசங்க (25) மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த சசின் தில்ஷான் (25) ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, ஹோமாகம ஆதார மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் சிலவற்றை, சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில், உயிரிழந்தவர்களின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டைகள் (Belts), தோடுகள் மற்றும் கழுத்து மாலைகள் போன்றவற்றை வைத்து அடையாளம் கண்டுள்ளனர்.

