வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்களது மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகப் புதன்கிழமை (27) காலை வீட்டில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
அதனைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த மிளகாய்த்தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுன் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு சென்றிருந்த குடும்பத்தினர் புதன்கிழமை (27) மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இத் திருட்டு சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்










