
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சிக்கல்கள் காரணமாக நீதிமன்றம் வரை சென்று வெளியீடு தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன், மே மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “எனது ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சிலர் கூட்டுச் சேர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்,” எனக் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறான சூழலில், நேற்று மாலை இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தன. அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணிநேரம் ஓடக்கூடிய முழுப்படமும் இணையத்தில் வெளியானது; இச்சம்பவம் தயாரிப்பு நிறுவனம், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பகிர்ந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் படக்குழு எச்சரித்துள்ளது. இது தொடர்பாகக் கே.வி.என். (KVN) நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி (OTT) மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.
இத்திரைப்படத்தின் சில காட்சிகள் சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக டிஜிட்டல் முறையில் கசியும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடன் வந்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (X), யூடியூப் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, பகிர்வது, பதிவேற்றுவது அல்லது சேமிப்பது கடுமையான குற்றச்செயலாகும். இது பதிப்புரிமை மீறல் (Copyright Infringement) சட்டத்தின் கீழ் வரும் என்றும்; இதில் சம்பந்தப்படும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாகக் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
திரைப்படத்தின் காட்சிகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து பரப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களுக்கு எதிராகவும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

