
கெட்ட பொல என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் பொல்லுகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞனை பொல்லுகளால் அடித்து கொலை செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில்,கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தர என்றழைக்கப்படும், 25 வயதுடைய சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், திருமணமாகாத நபராவார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், இவர், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கடைக்கு முன்னால் நடத்தப்பட்ட சூதாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவரது மாமாவால் பொல்லுகளால், தாக்கப்பட்டதில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

