தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலமாக இருந்த சாதி, மத அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உடைத்துள்ளதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், 2 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்த அவர், நேற்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு சென்றார்.
முதல்வரான பின்னர் திருச்சிக்கு முதன்முறையாக சென்ற முதல்வர் ஜோசப் விஜய்க்கு த.வெ.கவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 1,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி ஜோசப் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்துக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
த.வெ.கவின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பஸ் மீது அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி அமைச்சர் ஆனந்த் வரவேற்புரையும், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையும் வழங்கினர்.
அதன்பின்னர் முதல்வர் விஜய் உரையாற்றுகையில்,
இத்தனை ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஏமாற்றி ஆண்டு கொண்டிருந்தவர்களை ஒதுக்கிவிட்டு என்னை முதல் சேவகனாக ஆக்கியுள்ளீர்கள். அதற்கு நன்றி. எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் முதல் தேர்தலில் கூட இவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கவில்லை என்றார்கள். ஆனால், த.வெ.கவை அவ்வளவு ஆதரித்துள்ளீர்கள். நான் எம்.ஜி.ஆரோடு என்னை ஒப்பிடவில்லை, எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர்தான்.
எதிர்காலத்தில் வரும் அனைத்து தேர்தல்களிலும், உங்கள் ஆதரவை அதிகம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்க்கப் போகிறீர்கள்.
யார் எந்தப் பொறுப்புக்கு போனாலும் கிண்டலும், கேலியும் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு ஒரே வேண்டுகோள். தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். அதுதான் எனது ஆற்றல். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே இருப்பேன்.
நான் கோட் சூட் போடுவது பற்றி விமர்சிக்கிறார்கள். ஏன் நாம் கோட் சூட் போடக் கூடாதா? அதிகாரம் செய்வோரும், ஆதிக்க சக்திகளும்தான் கோட் சூட் போட வேண்டுமா? நான் கலர் கலராகவா கோட் சூட் போடுகிறேன்? இரண்டே கலர். நம் மனதைப் போல கருப்பு – வெள்ளை மட்டுமே.
‘மக்களுக்காக உழைக்க வந்துள்ள நீ அந்த வேலையை மட்டும் பார், உன்னை விமர்சிப்பவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என மக்கள் சொல்கிறார்கள். எனக்கு எதிரிகளே இல்லை என நினைக்க மாட்டேன். இப்போதும் இரண்டு பேருக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று தி.மு.க, இன்னொன்று த.வெ.க. மற்றும் பலருக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை.
விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது என்று தி.மு.கவும், மற்றும் பலரும் சேர்ந்து ஒரு கூத்து நடத்தினார்களே? இப்படியெல்லாம் கூட நடக்குமா என யோசித்தோம்.
எதிர்காலம் என்பது உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த விஜய்யா அல்லது நம் ஆட்சியை தடுக்க முயன்ற ஸ்டாலினா என்பதுதான்தான் போட்டி. நம்மை ஏளனமாகப் பேசுவதாக நினைத்து அவர்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். தி.மு.க நம்மை அவமானப் படுத்துவதால் நமக்கு நன்மையே.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜென்ஸியை மனதில் வைத்து தமிழ், ஆங்கிலம் கலந்து அறிக்கை வெளியிடுகிறார்கள். அதுபற்றி சொல்லவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் 50, 60 ஆண்டுகளாக இருந்த சாதி, மதம், காசு கொடுத்து வாக்கு வாங்கும் முறையை ஒழித்துள்ளோம்.
நம்மை ஆதரிப்பவர்களை நிச்சயம் அரவணைப்போம். த.வெ.க ஆட்சி எந்தப் பாகுபாடும் இல்லாத ஆட்சியாக இருக்கும். ஸ்டாலின் ஆட்சி போல ஊசலாட்டம் இருக்காது. மதசார்பற்ற கொள்கை, மாநில உரிமை, நதிநீர் உரிமை, சமூக நீதியை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதி இரு கண்கள் மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை வேட்பாளராக்குவோம். அவரை வெற்றி பெற வையுங்கள். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நிச்சயம் உருவாக்குவேன் என்று தெரிவித்தார். (a)

