தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவக் குழுவொன்றைக் (Psychiatric Forensic Medical Board) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவக் குழு, இது குறித்த தனது விரிவான மருத்துவ அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கு ஆதரவாகக் கொழும்பு கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

