இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி முச்சக்கர வண்டி ஒன்றை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஜீப் முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்துவதையும், பின்னர் ஜீப் நிற்காமல் செல்வதையும் காட்டும் ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது.
இதையடுத்து, கல்கிஸ்ஸை பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜீப்பை ஓட்டி வந்த பொலிஸ் அதிகாரியை கைது செய்த நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய ஹிக்கடுவையைச் சேர்ந்தவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. R

