பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீர்த்தனனை, பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுப் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீர்த்தனனை நான் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு அவருடன் கலந்துரையாடினேன். இந்தச் சங்கீர்த்தனனின் சிறைவாசம் தொடர்பான விவகாரம் குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளேன். அதேநேரம், ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான நேரத்தையும் கோரியுள்ளோம். இந்தச் சந்திப்பின்போது சங்கீர்த்தனனின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரிவாகப் பேசவுள்ளோம்.
நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன. இக்காலப்பகுதியிலாவது ஜனாதிபதியை நேரில் சந்தித்து, பொதுமன்னிப்பின் அடிப்படையில் சங்கீர்த்தனனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தவுள்ளோம்.
ஏனெனில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் பிணை பெறுவதற்குக் கூட உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சட்ட வழிமுறையே உள்ளது. சாதாரண நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்குப் பிணை வழங்க முடியாத சூழல் காணப்படுகிறது.
ஆகவே, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் விசேட கருணையின் அடிப்படையில் மட்டுமே சங்கீர்த்தனனின் விடுதலை தொடர்பான உடனடி முடிவுகளை மேற்கொள்ள முடியும். இதற்காக ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளேன். எனவே, அவரை விடுதலை செய்வதற்கான முழு முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.


