திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில், புதன்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குராக்கொட பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலையிலிருந்து பயணித்த சிறிய ரக ‘பட்டா’ (Batta) வாகனமும், திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய ‘பட்டா’ வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



