சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று வெளிநாட்டவர்கள் புதன்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக செல்ல முயன்றபோதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரைச் சேர்ந்த 26, 49 மற்றும் 22 வயதுடைய மூவராவர். இவர்கள் கையடக்கத்தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வரும் வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ‘பிட்ஸ் எயார்’ (FitsAir) விமான சேவைக்கு சொந்தமான 8D-822 என்ற விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கொண்டு வந்த 4 பயண பொதிகளுக்குள் இந்த தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
டீ.கே.ஜி.கபில


