
இணைய உலகில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான காணொளிகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியாகி உள்ள ஓர் அதிர்ச்சி அளிக்கும் காணொளி வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில், வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞர் திடீரென அங்கே நின்றிருந்த காளையுடன் வேண்டுமென்றே சண்டைக்குச் செல்கிறார். தன்னை ஒரு சண்டைக் காட்சியில் வரும் ஹீரோவைப் போலக் காட்டிக்கொள்ள முயன்ற அந்த இளைஞர், காளையை மீண்டும் மீண்டும் சீண்டி ஆத்திரமூட்டுகிறார்.
ஆரம்பத்தில் சில அடிகள் பின்வாங்கிய காளை, இளைஞரின் தொடர் அநாகரிகமான செயலால் ஆத்திரம் அடைந்து, மின்னல் வேகத்தில் அவரை நோக்கிப் பாய்கிறது. அடுத்த சில நொடிகளில், இளைஞரின் வீரமெல்லாம் காற்றில் பறக்க, காளை அவரைத் தனது கொம்புகளால் குத்தி உயரத் தூக்கி வீசுகிறது. காற்றில் சில வினாடிகள் மிதந்த அந்த நபர், கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்தோரைக் கதிகலங்கச் செய்ய, சிலர் ஓடிச் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனர். சமூக ஊடகங்களில் இந்த காணொளியைப் பார்க்கும் பலரும், “காளைகளுடன் சண்டையிடுவது ஆபத்தானது” என எச்சரிக்கை செய்து வருவதுடன், பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

