
சுதத் எச். எம். ஹேவா
மத்திய மலையகத்தின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக காசல்ரீ, விமலசுரேந்திர மற்றும் மவுசாக்கலே ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதுடன், பல நீர்வீழ்ச்சிகளும் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.
இவ்விடயம் குறித்து நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, “மத்திய மலையகத்தின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கடந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் மவுசாக்கலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 07 அடியினாலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 12 அடியினாலும் உயர்ந்துள்ளது. அத்துடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தற்போது வான்பாய்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரைக் கொண்டு நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதற்காக, அந்தந்த மின்நிலையங்களுக்கு அதிகளவில் நீரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் மழைக்கால வானிலையால் டெவோன், தியகல, லக்சபான மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களிலுள்ள நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் அதிக நீர்வரத்துடன் பாய்ந்தோடுவதால், இப்பகுதிகளின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





